28 in Thiruvananthapuram

வக்பு சட்டத்திருத்த பிரிவுகளுக்கு இடைக்கால தடை.. உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

Posted by: TV Next September 15, 2025 No Comments

சென்னை: வக்பு திருத்த சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். “உச்ச நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவு இஸ்லாமியர்களின் மத உரிமைகளையும் அடிப்படை உரிமைகளையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் உச்சநீதிமன்றம் பாதுகாக்கும் என மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வலுப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.” எனத் தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

பாஜக அரசு கொண்டு வந்த வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக திமுக, அகில இந்திய மஜ்லிஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், இடதுசாரிகள், முஸ்லிம் அமைப்புகள், பல்வேறு தொண்டு நிறுவனங்கள் என மொத்தம் 70-க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், முதலில் 5 மனுக்களை மட்டும் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. மேலும், புதிய வக்பு சட்டத்தின் கீழ் எந்தவொரு நியமனங்களோ அல்லது நடவடிக்கைகளோ மேற்கொள்ளக் கூடாது என்று இடைக்காலத் தடையும் விதித்தது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வக்பு வாரிய சட்டத் திருத்தத்தின் அனைத்து விதிகளையும் நிறுத்தும் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. அதேவேளையில், சில முக்கிய பிரிவுகளுக்கு இடைக்காலத் தடையை விதித்தது. 2025-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வக்பு திருத்தச் சட்டத்தில், ஒருவர் வக்பு வாரியத்தை அமைக்க, குறைந்தது 5 ஆண்டுகள் இஸ்லாம் மதத்தை பின்பற்றியிருக்க வேண்டும் என்ற விதியை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது

மேலும், ஒருவர் இஸ்லாத்தைப் பின்பற்றுபவரா என்பதைத் தீர்மானிக்கும் நடைமுறை விதிகள் வரைவாகும் வரை இந்த பிரிவு அமலுக்கு வராது” என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. அதேபோல், வக்பு என அறிவிக்கப்பட்ட சொத்து அரசாங்கச் சொத்தா என்பதைத் தீர்மானித்து உத்தரவிடும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியருக்கு வழங்கியிருந்த சட்டப் பிரிவையும் உச்ச நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

மேலும், வக்பு வாரியத்தில் 3 முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்றும், வக்பு கவுன்சிலில் 4 முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.மொத்தத்தில், வக்பு திருத்தச் சட்டம் முழுவதுமாக ரத்து செய்யப்படவில்லை என்றாலும், அதில் உள்ள சில சர்ச்சைக்குரிய பிரிவுகளின் அமல்படுத்தலை உச்ச நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

இந்நிலையில், தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “தி.மு.க.வும் மற்ற மனுதாரர்களும் வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கில், மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ள முக்கியத் திருத்தங்களுக்குத் தடை விதித்து மாண்பமை உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

வக்புக்குச் சொத்தை அளிக்க, 5 ஆண்டு இஸ்லாத்தைக் கட்டாயமாக நடைமுறையில் கடைப்பிடித்திருக்க வேண்டும் எனும் விதிக்குத் தடை

வக்பு நிலத்தை அரசு நிலம் என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்தாலே, உரிய அதிகாரி அறிக்கை அளிக்கும்வரை அல்லது அரசு முடிவெடுக்கும் வரை அச்சொத்தைப் பறிக்கும் அதிகாரத்துக்குத் தடை

வக்பு பயனர்’ என்பதை நீக்கும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கான அதிகாரத்துக்குத் தடை (நீண்டகால மதப் பயன்பாட்டின் அடிப்படையில் வக்பு சொத்துகளாகக் கருதப்படும் சொத்து)

மத்திய வக்பு வாரியத்தில் நான்குக்கும் மேற்பட்ட முஸ்லீம் அல்லாதோரை சேர்ப்பது, மாநில வக்பு வாரியங்களில் மூன்றுக்கும் மேற்பட்ட முஸ்லீம் அல்லாதோரைச் சேர்ப்பதற்குத் தடை. இதனால், இந்த வாரியங்களில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருப்பது உறுதிசெய்யப்படும்.

மத்திய பா.ஜ.க. அரசு அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக, சட்டவிரோதமாகச் செய்துள்ள திருத்தங்களை நீக்குவதை நோக்கிய முக்கிய நகர்வாக இன்றைய நீதிமன்ற உத்தரவு அமைந்துள்ளதஇந்த சட்டத்திருத்த முன்வரைவு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே, தி.மு.க இதனைத் தொடர்ச்சியாக எதிர்த்து வந்துள்ளது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள பலரோடு சேர்ந்து வெற்றியும் கண்டுள்ளது. தி.மு.க தலைமையிலான தமிழ்நாடு அரசும் ஒன்றிய அரசு வக்பு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்திச் சட்டமன்றத்தில் திர்மானம் நிறைவேற்றி, ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் பா.ஜ.கவின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தது.இந்நிலையில், இன்றைய உத்தரவு இஸ்லாமியர்களின் மத உரிமைகளையும் அடிப்படை உரிமைகளையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் மாண்பமை உச்சநீதிமன்றம் பாதுகாக்கும் என மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வலுப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்